Thursday, 17 December 2015

ஒற்றை கால் காகம்...!

அதோ ஒற்றை கால் காகம்...
சிறகடித்து வந்து
சந்தோஷமாய் ...
தண்ணீர் குடிக்கும்
ஒற்றை கால் காகம்...!

தான் கருப்பா சிவப்பா
பாவம் அதற்கு தெரியாது...
தாழ்வு மனப்பான்மை
இன்னதென்று ..
இதற்கு எப்போதும் தெரியாது...!

ஒற்றை கால் கொண்டு
உல்லாசமாய் சுற்றி திரியும்
இந்த ஜீவனின் அறிவிடம்,
மனித அறிவு மண்டியிடவே வேண்டும்...!

தாகம் என
என் வீடு கூரையில்
தஞ்சம் அடைந்தது
அந்த பறவை..!

அமாவாசை அன்று மட்டுமே நமக்கு
அவற்றின் நினைவு வரும்...
அன்று மட்டும் தான்
நம் முன்னோர்கள்
காகம் வடிவம் எடுப்பார்களோ...?

அதையும் கூட
இந்த ஹை டெக் உலகம்
எத்தனை நாள் செய்யுமோ...?

கால சக்கரத்தில்
"அடி" பட்டு போன
நல்லோர்களின் நன்மொழிகளில்
இதுவும் ஒன்றே...!

எறும்புக்கு உணவிட
கோலம் போட்டாள்
நம் பாட்டி...!
ஆனால் நாம்...
அதை சாயங்களை கொண்டு
அழகாய் பதிய வைத்தோம்...
என்ன ஒரு முன்னேற்றம்
இந்த ஆறாம் அறிவில்...!


எண்ணங்கள் எங்கெங்கோ சென்று...
அந்த ஒற்றை கால் காகத்திடமே
மீண்டும் திரும்பியது...

ஓடிசென்று ஒரு கை  உணவள்ளி
வீட்டு சுவற்றில் வைத்தேன் நான்...!

உணவில்லா நேரத்திலேயே...
உயிர்களின் குணம் புரியும்...

வாடிய பயிரை கண்டபோதெல்லாம்...
வாடிய காலங்கள் போனது...
கை குழந்தையின்
பசி ஆற்றும் பாலை
விலையேற்றி விற்கும்
விதியும் நேர்ந்தது...!

திடீரென
கா கா என கரைந்தது
அந்த ஒற்றை கால் காகம்...
தனக்கு வைத்த உணவென்று
தெரியாமல்..
தன் இனத்தாரையும் அழைத்து
பகிர்ந்து உண்டது
அந்த சிற்றறிவு ஜீவன்...!

அடுத்த நாள் செய்தி தாளை
அக்கறையோடு வாசித்தேன்...!


சென்னையில் குடிநீர்
மூன்று மடங்கு விலைக்கு
விற்கப்பட்டது...!


அந்த ஒற்றை கால் காகம்
என் எண்ண வானில் கம்பீரமாய் பறக்க...
எண்ணி பார்த்தேன்...

உணவை பகிர்ந்து உண்ண
நாம் என்ன காகங்களா ...
"கேவலம்" மனிதர்கள் ஆயிற்றே...!!!!


இவன்,
நிலவின் நண்பன்..!

Tuesday, 15 December 2015

அவ நடந்து வாராளே...


அவ நடந்து வாராளே...
நெஞ்சுல நடுக்கம் தாராளே...
முகம் சிவந்து வாராளே...
கண்ணுல மயக்கம் தாராளே...

படிபடியா வேணாம் பொண்ணே ...
உடனடியா  பேசணும்..
அந்த விண்வெளிக்கு போனா கூட..
காத்து நமக்கு வீசணும்...
காதல் காத்து நமக்கு வீசணும்...

என்ன தான் சொல்ல வர...
எனக்கு ஏதும் வெளங்கலையே...
போன தடவ பாத்ததுக்கே...
போத இன்னும் எறங்கலையே ...

தாறுமாறா தடுமாறி போனேன் ...
தங்கமே உன்னாலே...
நீ கை வீசி கடந்து போனா..
பொங்குதே தன்னால...
கவித பொங்குதே தன்னால...!!!

இவன்,
நிலவின் நண்பன்...!


Monday, 30 November 2015

புது பூக்கள் ...!

என்னை தாண்டி போன தேவதையே ...
என் தேகமெல்லாம் சிலிர்க்குதே...
நீ சீண்டி போன என் மனதில் 
புது பூக்கள் துளிர்க்குதே...

Ponds பவுடர் வாசம் 
நெஞ்சமெல்லாம் நிறைய...
என் எடை எக்கச்சக்கமாய் குறைய...
பறக்கிறேன் பறக்கிறேன் 
காற்றில் பறக்கிறேன் ...
மெல்ல மெல்ல கரைந்து 
காற்றாய் பறக்கிறேன்...!

ஓரக்கண் பார்வைகள் 
என்னை ஓங்கி அடிக்க ...
சிரிக்கிறேன் சிரிக்கிறேன் 
ஒரு மாதிரி சிரிக்கிறேன் ...
ஒருவருக்கும் தெரியாமல் 
ஒளிஞ்சு ஒளிஞ்சு சிரிக்கிறேன்...!

ஓராயிரம் புல்லாங்குழல்கள் 
எனக்காய் மட்டும் இசைக்கும் 
இனிமை இதுவோ...?
புத்தம் புது உலகில் 
முதல் கால் பதிக்கும் 
புதுமை இதுவோ...?

கடிகார நொடிகளே
மெல்ல சுற்றுங்கள் ...
சிறு பிள்ளை இவனை 
காதல் காற்று அணைக்கட்டும்...!

வானத்து மேகங்கள் 
வண்ண வண்ண ஓவியங்களாக ...
அவை மழையாய் இறங்கி 
வண்ணத்தில் என்னை மூழ்கடிக்க ...

திணறுதே...
மூச்சு திணறுதே...
உயிர் 
உள்ளுக்குள் எதையோ 
உணருதே...!

==> 
இவன்,
நிலவின் நண்பன் ...!

Thursday, 3 September 2015

கண்களை திறந்துகொள் கண்மணி ...

நிழலாய் உன்னோடு 
வர விழைகிறேன்...
நீயோ 
இருட்டு கோட்டையில் நுழைந்து 
உன் இதயத்தை பூட்டிக்கொண்டாய்...

உன் மனக்கதவை தட்டி பார்க்க ஆசைதான் 
முடியவில்லையடி!
திறக்காமல் போவாயோ என்ற 
அச்சத்தால் அல்ல...
உன் அமைதி என்னால் 
தொலைந்துவிடுமோ என்று !

துப்பட்டாவால் முகம் போர்த்தி 
துயரத்தால் மனம் போர்த்தி 
நீயும் என்னை 
ஒளிந்து கடந்து போவதேனோ ?

புழுங்கி போன உன் வாழ்வில் 
புன்னகை பூங்காற்று வீச 
என்ன விலை வேண்டும் என்னவளே..?

என் பிரிவு தான் வேண்டும் என்று 
அப்போதே சொல்லி இருந்தால் 
எப்போதோ விலகி இருப்பேனே ..!
நான்.. நீ சிரிப்பதை பார்த்தே 
பழக்கப்பட்டவன்!

உன் கண்களை 
திறந்துகொள் என் கண்மணியே ...!
உன் கருவிழியில் 
இவன் இனி விழவே மாட்டான் !

==>
இவன்,
நிலவின் நண்பன் !

Monday, 22 June 2015

போ மச்சான் போ போ ...
இந்த பொண்ணுங்கள பாக்காத...
வெச்சிடுவா பொலம்ப
நீ கிட்ட கூட சேக்காத ...!

ஒரு முறை தான் உன்ன பாத்து
lightaa அவ சிரிப்பா...
உன்னோட கதைய
quieta தான முடிப்பா..

படத்தோட பதினொன்னு நீயாகி போவ...
செத்தாலும் அவளையே ...
நெனச்சு தான சாவ...!

தண்ணின்னு நெனச்சு
தல கீழ dive அடிப்ப...
மச்சி... பாராங்கல்லுடா ...
அவ மனசு...
பாழுங் கிணறு டா...

சிக்கிடாத..
செதறிடாத...
அப்புறம் சரக்கடிச்சி...
என்ன சாவடிகாத...

போ மச்சான் போ போ ...
இந்த பொண்ணுங்கள பாக்காத...
வெச்சிடுவா பொலம்ப
நீ கிட்ட கூட சேக்காத ...!

==>
இவன்,
நிலவின் நண்பன் !

Wednesday, 10 June 2015

திருவிழா கூட்டத்தில்
அம்மாவின் கையை நழுவவிட்ட
குழந்தையின் நிலை உனக்கு புரியும்...
அந்த அம்மாவின் வலி உனக்கு தெரியுமா...?
என் இடத்தில் இருந்து பார்
என் என்னவளே...!

உன்னை எங்கு எப்போது தொலைத்தேன்
என்றே தெரியவில்லை எனக்கு...
பின்பு எப்படி உன்னை நான் தேடி கண்டுபிடிக்க ...?

திரும்ப கிடைத்த குழந்தை
அம்மாவை பார்த்து நீ யார் என்று கேட்டால் ...?
ஆனால்  நீ கேட்டாயடி...!
அந்த வலியை
வார்த்தைகளால் எப்படி சொல்ல...?

ஒன்றாய் கை கோர்த்து நடப்போம் என்று
கற்பனையில் வாழ்ந்து கொண்டே...
நிஜத்தில் உன் கையை விட்டு விட்டேனோ...?

==>
இவன்,
நிலவின் நண்பன்...!

Tuesday, 9 June 2015

உன்னுடன் நான் இருந்த காலத்தை
"இறந்தகாலம்" என்று யார் சொன்னார்கள் ???
அது என்றும் என்னுள் வாழுமடி ...
நான் இருக்கும் வரை ...
என் நினைவு இருக்கும் வரை ...
கோடைகால நிழலாய் ...
குழந்தையின் சிரிப்பாய் ...
மழைமண் வாசனையாய் ...
மயில் இறகின் வருடலாய் ...
கண்களை நனைக்கும்
அந்த பாடல்களாய்...


==>
இவன்,
நிலவின் நண்பன்...!

Monday, 9 February 2015

நிலவின் நினைவில்...!     -- 1

            அன்று பௌர்ணமி ! அழகிய நிலா அந்த விண்மீன் குளத்தில் தேவதையாய் நீந்தி கொண்டிருந்தாள். சில்லென காற்று சருகுகளை அடித்து செல்ல, தெருவிளக்கு கம்பத்தில் சாய்ந்து, அந்த நிலவையே பார்த்து கொண்டிருந்தான் சிவா.

"கண்ணில் என்ன தூசி பட்டுவிட்டதோ...?
துடிதுடித்து கொண்டிருந்தது,
அந்த தெருவிளக்கு!"

இவனுக்கும் அதே தூசி கண்ணில் பட்டுவிட்டதோ? சிவாவின் கைகள் அவன் கண்களை துடைத்து கொண்டே இருந்தது.

"நினைத்து நினைத்து பார்த்தேன்...!"
அலைபேசியில் இருந்து வந்து கொண்டிருந்தது அந்த பாடல் வரிகள்.
தன்னை மறந்து கண்களை மூடினான் சிவா. நெஞ்சங்குழியில் தேங்கி இருந்த நினைவுகள், தொண்டை குழியை அடைத்து கொண்டு இருந்தது.

"அவள் முகம்...
அவள் ஓரப்பார்வை...
அவள் உதட்டுசுழிப்பு...
அவள் கூந்தல்...
அவள் புன்னகை...
அவள் அழுகை...
அவள் விரல்கள்...
அவள் தீண்டல்...
அவள் சினுங்கல்..."

எல்லாம் சிவாவின் கண்முன்னே மின்னல் போல் தோன்றி மறைய, இதயத்தின் உள்ளே இடி இடிக்க, கண்களின் ஓரமோ கண்ணீர் மழை!

"ஆண்மகன் அழகூடாது தான்!
ஆனால் தாயாய் மாறி அவளை தன்னுள் தாங்கி நின்றானே!
அதனால் தான் அழுகிறானோ!"

அன்று அவளுடன் முதன் முதலாய் அலைபேசியில் பேசிக்கொண்டு , ஒய்யாரமாய் சாய்ந்து இருந்த அந்த தெருவிளக்கு, இன்றும் அவனை தாங்கி கொண்டு நின்றது.

"சிவா... சிவா...! அங்க என்னப்பா பண்ற...!"

அந்த கம்பத்தின் கதகதப்பில் சாய்ந்து இருந்த அவன், சட்டென கண்களை துடைத்து, அலைபேசியை காதில் வைத்து திரும்பினான். சிவாவின் அம்மா வீட்டு வாசலில் நின்றுகொண்டு அவனை அழைத்தாள்.

"இதோ வந்துட்டேன்மா!" உதட்டில் உண்மை சிரிப்பை வரவழைத்து கொண்டு வீட்டை நோக்கி நடந்தான் சிவா.

"உனக்காக தான் அப்பா சாப்பிடாம உக்காந்துட்டு இருக்கார். கேட்டா தம்பி வந்துடட்டும்னு சொல்றார்.."

"Friend  கிட்ட பேசிட்டு  இருந்தேன் மா... வா போலாம்... " என்று அம்மாவின் தோள் மீது கைவைத்து அம்மாவை தள்ளி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் சிவா!

- தொடரும்